Monday, August 30, 2010

தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா

தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா?-சத்துணவு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகை வழங்கியுள்ளோம்; கருணாநிதி அறிக்கை
சென்னை, ஆக.31-
 
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
திராவிட இயக்கம், திராவிடர் கழகமாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - ஒவ்வொரு நேரத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, வேண்டுமென்றே அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவோ - "போர் முனைக்கு வாருங்கள்'' என்று பொதுமக்களைத் திரட்டியதும் இல்லை - தனது கட்சித் தோழர்களை அவ்வாறு கூறி அழைத்ததும் இல்லை. எந்தப் பிரச்சினைக்கான கோரிக்கை முழக்கமிட்ட காலத்திலும், அதற்கான கிளர்ச்சிகளை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவைகள் தான். அதனால்தான் அந்தப் போராட்டங்கள் "அறப்போராட்டம்'' என்ற பெயரிட்டே அழைக்கப்பட்டது.
 
தமிழ் மொழிக்குப் பேராபத்து சூழுமோ என்ற நிலையில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த போதுகூட, 1938-ஆம் ஆண்டு வாக்கில் சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் அறப்போர் வீரர்கள் அணி வகுத்து நின்று - முதல் அணியிலே அவர்கள் யார் யார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு - குறிப்பிட்ட நாளில் - குறிப்பிட்ட பள்ளியின் வாசலில் - குறிப்பிட்ட தோழர்கள் மாத்திரம் அமைதியான முறையில் மறியல் செய்து கைதாகியிருக்கிறார்களே தவிர - மொழிப் போராட்ட வீரர்கள், பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்றோ அல்லது இந்தியைக் கட்டாயப்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களுடைய கோட்டையை முற்றுகையிடுவார்கள் என்றோ கட்சித் தலைமையினால் அறிவிக்கப்படவும் இல்லை; அப்படியொரு போராட்டத்தில் ஈடுபடவும் இல்லை. ஆனால் பொது மக்கள் - ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
 
நம்முடைய கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்களே, அவர்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையைக் குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் (கோட்டை) முற்றுகை என்பார்கள். ஓர் அரசு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவர்கள் அணி வகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வர வேண்டும் என்றும் - முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இப்படித் தான் கம்ïனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி "கோட்டை முற்றுகை'' என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
 
அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் "மாவோயிஸ்ட்'' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம். தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை வன்முறைச் சேட்டைகளை கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி, "சிறுதாவூர் சீமாட்டி'', வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு - திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.
 
இதோ பாருங்கள்! அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் சாராம்சமாக என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள்? "சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு முடிவின்படி 30-8-2010 திங்கள் அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அரசு அதனை தடுத்து நிறுத்திவிட்டது'' - இது அவர்களின் துண்டறிக்கையில் காணப்படும் இந்த அரசைப் பற்றிய குற்றச்சாட்டு.
 
இவர்கள் கோட்டையை நோக்கி வருவார்களாம்! முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்! அதை அரசும் இந்த அரசின் காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்களுக்கெல்லாம் விருந்து வைத்து மகிழவேண்டுமாம். என்ன இவர்களுடைய கோரிக்கை?
 
அவர்களே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.
 
எத்தனை ஆண்டு கோரிக்கை இது? அவர்களே கூறுகிறார்கள் - 27 ஆண்டு கோரிக்கை என்று! இந்த 27 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்கள் என்று இல்லாவிட்டாலும் - தொகுப்பூதிய ஊழியர்கள் என்று ஆயிரக் கணக்கானவர்கள் இந்த அரசில் பணியாற்றினார்களா? இல்லையா? அவர்களுக்கெல்லாம் எந்த ஆட்சியிலாவது பணி நிரந்தரம் செய்யப்பட்டதா?
 
தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதற்கு எந்த அரசாவது ஏன் மேற்கு வங்க அரசோ, கேரள அரசோ போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளாவது முன் வந்தது உண்டா? ஆனால் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி'' என்ற கதையாக தமிழ் நாட்டில் மாத்திரம் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றும், அதற்கு கோட்டையையே முற்றுகையிடுவோம் என்றும், அதைக் காவலர்கள் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறைப் பெரிதுபடுத்தி, "தமிழக அரசின் உச்ச கட்ட அராஜகம்'' என்று ஊருக்கு ஊர் சொல்லுவோம் என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகை ஜனநாயகம் என்று எனக்குத் தெரியவில்லை.
 
போகட்டும், இந்த கோரிக்கையைக்கூட இந்த அரசு கவனிக்காமல் இருந்ததா? கவனித்த காரணத்தால் தான் அவர்களை முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க இயலா விட்டாலும், கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசு அளிக்காத சலுகைகளையெல்லாம் இந்த ஆட்சியிலே அளித்திருக்கிறோம். உதாரணமாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியில் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
 
அங்கன்வாடி, மற்றும் சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர், சமையல் உதவியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்திற்குப் பதிலாக "சிறப்பு கால முறை ஊதியம்'' வழங்க இந்த ஆட்சிக் காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் கழக ஆட்சியிலே தான் முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
 
கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு மாதந்தோறும் முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில்தான் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
 
கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு காலத்தில் விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன.
 
சத்துணவு அமைப்பாளர்கள், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோர் தமிழகத்தில் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அளவு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம்.
 
இந்த அளவிற்கு கழக அரசின் சார்பில் அவர்களுக்கு சலுகைகள் அளித்து வரும் நிலையில் அவர்கள் இந்த அரசினை எதிர்த்து, கோட்டை முன் முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா? தற்போதைய சத்துணவுப் பணியாளர்கள் பிரச்சினையில் கோட்டையை முற்றுகையிட வேண்டிய அளவிற்கு என்ன நடந்து விட்டது?
 
அ.தி.மு.க. ஆட்சியில் "எஸ்மா, டெஸ்மா'' சட்டங்கள் கொண்டு வரப்பட்டதைப் போல தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதா? அல்லது அந்த ஆட்சியில் இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு நிலைமை இருந்ததே அது போல இப்போது ஏதாவது நிலைமையா? அல்லது ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதே அது போன்று ஏதாவது தற்போது நடைபெற்று விட்டதா? எதற்காக முற்றுகை போராட்டம்? சத்துணவு பணியாளர்களுக்கு என்று இந்த ஒரு சங்கம் தான் உள்ளதா?
 
கடந்த ஆண்டு 21-11-2009 அன்று சத்துணவு பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் எம். பழனிநாதன் போன்றவர்கள், வரதராசன் போன்றவர்கள் எல்லாம் வள்ளுவர் கோட்டத்திலே பல்லாயிரக் கணக்கான சத்துணவு பணியாளர்கள் திரண்டிருந்து எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடத்தினார்களே, அந்த அலுவலர்கள் எல்லாம் உண்மையை அறிய மாட்டார்களா? அவர்கள் மத்தியில் நான் அடுக்கடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பதினைந்து சலுகைகளை அறிவித்த போது அந்த மண்டபமே எதிரொலிக்கின்ற அளவுக்கு அவர்கள் கையொலி செய்யவில்லையா?
 
அந்த விழாவிலே பேசியது மாத்திரமல்லாமல், அந்தச் சலுகைகளுக்காக நன்றி தெரிவித்து, பழனிநாதனும், சூரியமூர்த்தியும் அறிக்கைகள் விட்டது இன்றளவும் ஏடுகளிலே உள்ளதே? ஏன், சத்துணவு பணியாளர்களுக்காக 2006ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட போது சட்டப் பேரவையிலேயே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ், பா.ம.க. கட்சியினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துப் பேசியது 1-9-2006 தேதிய அவை நடவடிக்கை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளதே!
 
உண்மையிலே சொல்லப் போனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எந்தவிதமான குறையும் இல்லை. அவர்கள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு ஒரு சில சங்கத்தினர் மட்டும், அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், ஒரு சில கோவில்களைப் பார்த்து வரலாம் என்று கூறி ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகிறார்களே தவிர வேறல்ல. மற்ற அலுவலர்களின் சங்கத்தினர் எல்லாம் இது போன்ற கோரிக்கைகளுக்குத் தீர்வு வர வேண்டுமென்று நினைப்பவர்கள் என்னையோ அமைச்சர்களையோ அணுகி தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து சலுகைகளைப் பெறுகிறார்கள், ஆனால் வேண்டுமென்றே இந்த அரசுக்கு எப்படியாவது கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நினைப்போடு இருப்பவர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
 
அவர்களின் உண்மை உருவத்தை இந்தச் சங்கங்களில் உறுப்பினர் களாக இடம் பெற்றிருப்பவர்கள், வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளதா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டாமா? "குடிதழீஇக் கோலோச்சும்'' குறள் நெறி நடக்கும் இந்த அரசைக் குறை கூறுவது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள்!
 
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment