Sunday, November 14, 2010

நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி

நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? - 13-11-2010
சிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.
என்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள்.

இதனால் நேர்முகத் தேர்வாளரின் மனதில், நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, நாம் நமது வாய்ப்பை இழந்து விடுகிறோம். நம்முடைய பெரிய எதிர்பார்ப்பானது, 10-20  நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் ஒரு சிறிய நிகழ்வில் நொறுங்கிப்போவது நம்மை நம்பிக்கை இழக்க செய்கிறது.

ஒரு நேர்முகத் தேர்வில் எவ்வாறு பங்குபெற்று அதை வெற்றிகரமானதாக ஆக்கி, நமக்கான பணியை பெறுவது என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள் இங்கே...

அடிப்படையானவை:
நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அலுவல் ரீதியான உடை அணியவும். குறித்த நேரத்தில் சென்று விடவும். நேர்முகத்தேர்வு அதிகாரி உங்களிடம் நல்ல நட்பு முறையில் பேசினாலும்கூட, அதனால் நீங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களிடம் தனிப்பட்ட கேள்வியோ அல்லது அவர்களை வாழ்த்தியோ எதுவும் பேச வேண்டாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் கவனத்துடன் அதேசமயம் அளவுடன் கூறவும்.

உங்கள் மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து வைத்து விடவும். உங்கள் முழு கவனத்தையும் நேர்முகத்தேர்வில் செலுத்துவதோடு, அச்சமயத்தில் இங்கும் - அங்கும் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நேர்முகத்தேர்வு அதிகாரி, உங்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் குறுக்கே பேசுவதை தவிர்க்கவும்.

நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது உங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன், உங்களின் சான்றிதழ்கள், நோட்பேட் மற்றும் பேனா போன்றவைகளையும் எடுத்து செல்லவும். உங்கள் சுயவிவர விண்ணப்பத்தில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது இலக்கண பிழை உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது முதலில் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

தயாராக இருத்தல்:

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, நிறுவனம் போன்றவை பற்றி அதிக விவரங்களை தெரிந்து வைத்திருக்கவும். மேலும், நீங்கள் ஏன் உங்களின் முந்தைய பணியிலிருந்து விலகினீர்கள்? ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள்? இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று முன்பே தயாராகி கொள்ளவும். ஏனெனில் இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களின் மூலமாகத்தான் உங்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நேர்முகத் தேர்வாளர்கள் மதிப்பிடுவார்கள்.

நேர்முகத் தேர்வுக்கு முன்பாக உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை நன்கு படிக்கவும். இதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை ஒட்டிய பொருத்தமான பதில்கள் அளிப்பதை உறுதிசெய்ய முடிவதுடன், நேர்முகத்தேர்வு குழுவையும் திருப்தி செய்ய முடியும்.

விழிப்புணர்வு:
உங்களின் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் விழிப்புடன் இருக்கவும். ஏனெனில் உங்களின் முந்தைய பணி மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்களின் உறவு போன்றவை பற்றி கேள்விகள் கேட்கப்படுகையில், எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் பழைய அனுபவம் கசப்பானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றி சாதகமான பதிலையே கூறவும். பேசும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசவும். பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசினால் நீங்கள் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்துவிடும். மேலும் கால்களை ஆட்டிக்கொண்டே இருத்தல் மற்றும் கைகளை இறுக்கமாக பற்றியிருத்தல் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக்கொடுத்து விடும்.

கேள்விகள்:
நேர்முகத்தேர்வாளரிடம், ஆரம்பத்திலேயே விடுமுறை, பிற வசதிகள் போன்றவற்றை பற்றி கேட்ககூடாது. முதலில் நேர்முகத்தேர்வு முழுவதும் முடிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டு  விட்டீர்கள் என்று தெரிந்த பின்னர், நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றி கேட்கவும். மேலும் இவற்றைவிட, நேர்முகத்தேர்வாளர் சம்பள விவரத்தை பற்றிபேச அவருக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது முதல் சில நிமிடங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்பாடுதான், உங்களுக்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது. எனவே பதற்றப்படாமல் நன்கு யோசித்து செயல்படவும்.

நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல. எனவே அதை நினைத்து பெரிதாக பயப்பட தேவையில்லை. அதேசமயம் வாழ்க்கை போராட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அசட்டையாக இல்லாமல், சற்று விழிப்புடணும் எச்சரிக்கையுடணும் இருந்தாலே வெற்றியை நிச்சயமாக்கி கொள்ளலாம்.

No comments:

Post a Comment