Friday, February 25, 2011

படித்தால் மட்டும் போதாது: பகுத்தறிவுடன் நடக்க வேண்டும்: மாணவர்களுக்கு கலைஞர் அறிவுரை

படித்தால் மட்டும் போதாது: பகுத்தறிவுடன் நடக்க வேண்டும்: மாணவர்களுக்கு கலைஞர் அறிவுரை

சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புதியதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகக் கட்டிடம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகக் கட்டடம், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கட்டடங்களை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி,
திறந்த நிலை பல்கலைக் கழகத்தின்  திறப்பு விழா  என்ற காரணத்தினாலோ என்னவோ சொற்பொழிவாளர்களில் சிலர்     என்னைத் தவிர எல்லோருமே திறந்த நிலையிலேயே பல விஷயங்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நான் எடுத்துச் சொல்கின்ற செய்திகளுக்கு சுவர் உண்டு, கதவு உண்டு, மேலே கூரை உண்டு. அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல,  திறந்த நிலையிலே இருக்கக் கூடியவைகள் அல்ல என்பதை  முதலிலேயே சொல்ல விரும்புகிறேன்.
உயர்கல்வியைப் பற்றி  இங்கே எடுத்துரைக்கப்பட்டது.   உயர் கல்வி யின் பெருமை,  உயர் கல்வியினால் ஏற்பட்டிருக்கின்ற மேன்மை, வளம்,  நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வலிவு,  தெளிவு இவைகளைப் பற்றியெல்லாம்  எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.  என்னைப் பொறுத்தவரையில்  உயர் கல்விக் கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.   ஏனென்றால் நான் உயர் கல்வி அளவுக்குச் சென்று படித்தவன் அல்ல.   அதற்கு முன்பே என்னுடைய படிப்பை  நானே நிறுத்திக் கொண்டு விட்டேன்.  

அரசியலில்   பொது வாழ்வில்   சமுதாயத் தொண்டில்  ஏற்பட்ட ஆர்வமும்,  பெரியார்   அண்ணா  இவர்களுடைய 
கருத்துக்களில்  எனக்கேற்பட்ட ஈர்ப்பும்  அதிலே அவற்றை  எடுத்துச் சொல்லக்கூடிய  அந்த ஆர்வத்திலே நான் என்னை ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால்  உயர் கல்வி பக்கமே  நான் திரும்பியதில்லை.   அது என்னவோ  தமிழகத்தில்  கல்வி வளர்ச்சியில்  அதிக நாட்டம் கொண்டு  ஆரம்பக் கல்வி யை  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளித்த  பெருந்தலைவர் காமராஜரும்  கல்வியிலே தேர்ச்சி பெற்றவர் அல்ல.   காமராஜருடைய வழியில்  அடுத்தடுத்து  உயர் கல்வி வரையிலே மக்கள்  பயன் பெற வேண்டுமென்று எண்ணி, அதற்கான  திட்டங்களைத் தீட்டிய நானும்  உயர் கல்வியிலே தேர்ச்சி பெற்றவன் அல்ல.   அந்தப் பக்கம் போனவன் கூட அல்ல.   ஆனால்  உயர் கல்விக் கூடத்திற்கு நான் செல்லாவிட்டாலுங்கூட  உயர் கல்விக் கூடத்திலே இருந்து   வழங்கப்பட
gkmtech.hpage.com
வேண்டிய செய்திகளை  நான்  யாரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டேனோ  அந்தத் தந்தை பெரியாரும்,  பேரறிஞர் அண்ணாவும்  எனக்கு  போதித்த காரணத்தால், அவர்களை  உயர் கல்விக்கும் ஆசிரியர் களாக நான் அமைத்துக் கொண்டு  நான் பெற்ற பல கருத்துக்களை, அனுபவங்களை  இன்றைக்கு நாட்டு மக்களுக்கு செயல் வடிவத்திலே தந்து கொண்டிருக்கின்றேன்.

 சில நேரங்களில்  மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதைச் சிந்திப்பதற்கு இன்னும்  எந்த வகையில்
எல்லாம் மக்களுக்கு உழைக்க வேண்டுமென்பதைப் பற்றியெல்லாம் எண்ணுவதற்கு  அடித்தளமாக இருப்பது  கல்வி என்பதை  மறுப்பார் இல்லை.    ஆனால்  அந்த கல்வியை முறையாகக் கற்காமல் இருந்தாலும்கூட,  ஒரு ஆர்வம், ஒரு  நம்பிக்கை  நாட்டிற்கு உழைக்க வேண்டுமென்கிற அந்த எண்ணம்  வேறு யாருக்கு இருந் தாலும்  அவர்கள்  அந்தக் கல்வியினுடைய  தரத்தை, முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை மக்களுக்கு வழங்கிட வேண்டும்  என்று முன்வருவார்கள். 

நாம் தான்
படிக்கவில்லை,  மற்றவர்கள் படித்து என்ன  என்று எண்ணாமல்,  மற்றவர்களாவது படிக்கட்டும், நம்முடைய பிள்ளைகளாவது படிக்கட்டும், பேரன் பேத்திகளாவது படிக்கட்டும் என்று எண்ணுகின்ற  ஒரு குடும்பத் தலைவனைப் போல நான்  தமிழகத்திலே இன்றைக்கு எல்லோரும் படிக்க வேண்டும், படித்து அறிவு பெற வேண்டும், அந்த அறிவு வளர்ச்சியினால் அன்னிய நாடுகள் எல்லாம் பார்த்து ஆச்சரியப்படக் கூடிய அளவிற்கு நாம்  நம்முடைய  நாட்டை, சமுதாயத்தை, உயர்த்த வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே தான் பள்ளிக் கூடங்கள்,  கல்விக் கூடங்கள்   இது போன்ற  கட்டிடங்கள்    அந்தக் கட்டிடங்களிலே  தேவையான விஞ்ஞான ஆராய்ச்சி கள்    அந்தக் கட்டிடங்கள் எல்லாம்  காலியாக கிடக்காமல் மாணவர்கள்    அந்த மாணவர்கள் மத்தியிலே மதி நுட்பம் வாய்ந்த ஆசிரியர்கள்     அந்த ஆசிரியர்களின் கைகளிலே நல்ல நூல்கள்     அந்த நூல்களின் வாயிலாக அவர்களுக்குப் போதிக்கின்ற  அருமையான பாடங்கள்    அந்தப் பாடங்களை கற்கின்ற மாணவர்கள் பெறுகின்ற பயிற்சி, பண்பு, நாட்டை வாழ்விக்க கையிலே ஏற்றிய  விளக்குகளாக இருக்க வேண்டும் என்ற அந்த நிலை    இவைகள் எல்லாம் தான்  ஒரு நாட்டில்  கல்வியினுடைய அடிப்படை விளைவுகளாக  அமைய முடியும்.   



 இப்பொழுது இங்கே  விழா தொடங்கிய போது  இங்கே உரையாற்றியவர் களிலே ஒருவர் சொன்னார்    கல்வி  பாமரர்களைப் படிக்க வைத்து  பண்புடையவர்களாக  ஆக்கும் என்ற  ஒரு வாக்கியத்தை இங்கே சொன்னார்.    அது யார் சொன்னது என்று ஞாபகம் வராத காரணத்தால், நான் ஒரு வேளை நம்முடைய துணை வேந்தர், கல்யாணி அன்புச் செல்வன் அதனைச் சொல்லியிருக்கலாமோ என்று    அவர்கள் படித்த அந்தப் பேச்சுக் குறிப்பினை வாங்கிப் பார்த்தேன்.   ஆனால் அவர்கள் சொல்லவில்லை.  அவர்களுக்கு முன்பு பேசியவர் அதைச் சொல்லியிருக்கிறார்.   படிப்பு என்பது   பாமரத் தன்மையைப் போக்கக் கூடியது, பாமரர்களுக்கு  படிப்பு ஒரு விளக்கு என்ற கருத்தை  இங்கே  வரவேற்புரையாற்றிய நேரத்தில் எடுத்துச் சொன்னார்கள்.  

ஆனால் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.  பாமரன்  படித்த  பிறகு,  அவன் படிப்பாளியாக ஆன பிறகு   இப்பொழுது
நாட்டிலே படித்தவன்  பாமரனாக ஆகி விடுகிறான்,  பாமரன் படித்தவனாக  ஆகிய அதே நேரத்தில்   படித்தவன் பாமரனாக ஆகி விடுகிறான் என்பதை மறந்து விடக் கூடாது.   அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   நான் சொல்கின்ற  இந்த ஒரே வரி எத்தனையோ நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடும்.   படித்தால்  பண்பு ஏற்படும், அடக்கம் ஏற்படும், அறிவு வளரும், அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள், அமளி இல்லாத நாடு, வன்முறை இல்லாத நாடு எழும் என்றெல்லாம் சொல்வோம்.   ஆனால் படித்தவர்களாலேயே  பல இடங்களில்  வன்முறைகள் ஏற்படுவதும், படித்தவர் களாலேயே  பல இடங்களில்  அராஜகங்கள்  மலிவதும்  அன்றாட நிகழ்ச்சி களாக ஆகிவிட்டிருக்கின்றன.

 இன்றைக்குக் காலையிலே கூட  படித்தவர்கள் சில பேர் ஊர்வலமாக வந்து  நம்முடைய  தலைமைச் செயலகத்தி
ற்குள்ளேயே  நுழைவதற்கு ஆயத்தம் செய்து,  காவல் துறையினர் அவர்களை கடுமையாகவும், கனிவாக வும் கேட்டுக் கொண்டு  வெளியே அனுப்பியிருக்கிறார்கள்.   அவர்களை அழைத்து மாலையிலே நான் பேசினேன்.   காலையிலே ஏன் அப்படி நடை பெற்றது, படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று நான் அழைத்துப் பேசினேன்.   அவர்கள் அதற்குக் காரணம் சொன்னார்கள்.  

அய்யா, எங்களுக்கு  வேலை இடையிலே பிடுங்கிக் கொள்ளப்பட்டு விட்டது.   அந்த வேலையைத் திரும்பத் தர வேண்டுமென்று
கேட்டு  போராடிக் கொண்டிருந்த போது     அந்த வேலையை  நீங்கள் தான் தந்தீர்கள் என்றார்கள்.   சரி, அதற்கென்ன என்றேன்.  கடந்த கால ஆட்சியிலே  வேலை எங்களை விட்டுப் போனது.   அந்த வேலை போன பிறகு    அந்த வேலையை மீண்டும் எங்களுக்குத் தர வேண்டுமென்பதற்காக நீங்கள் போராடி    நாங்கள்அந்த வேலையைப் பெற்றோம்.   எந்த வேலையிலே இருந்தீர்கள், எப்படி போனது என்று மீண்டும் நான் கேட்டேன்.   நாங்கள் எல்லாம் சாலைப் பணியாளர் களாக உங்கள் ஆட்சியிலே தான்  பணி அமர்த்தப்பட்டோம்.   நாங்கள் எல்லாம் ஓரளவிற்குப் படித்தவர்கள்.   வெறும் கூலி வேலை  செய்பவர்கள் அல்ல,  படித்தும் இருக்கிறோம்.    உங்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள்  எங்களை வேலையிலிருந்து அனுப்பி விட்டார்கள்.

 ஆனால் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன்  எங்களை மீண்டும் வேலையிலே அமர்த்தி விட்டீர்கள் என்றதும், சரி  பிறகு
என்னதான் பிரச்சினை என்று கேட்டேன்.   கடந்த ஆட்சியிலே எங்களை வேலையிலிருந்து  துரத்தினார்களே,  அப்படி துரத்தப் பட்ட காலம் முதல், மறுபடியும்  நீங்கள் எங்களை வேலைக்கு அமர்த்தினீர்களே, அந்தக் காலம் வரை  சுமார்  நாற்பது மாத காலம்  நாங்கள் வேலை இல்லாமல் இருந்தோமே, அந்தக் காலத்திற்குரிய  சம்பளத்தை தரவேண்டும்,   அந்தக் காலத்தை பணி செய்த காலமாக கணக்கிலே கொள்ள வேண்டும் என்பதற் காக போராடுகிறோம் என்றார்கள்.   அவர்களை பணியிலே சேர்த்தது நான்,  அந்தப் பணியிலிருந்து அவர்களை அனுப்பியது வேறு யாரோ?   அனுப்பியவர் களை மீண்டும் பணியிலே சேர்க்க வேண்டுமென்பதற்காகப் போராடி    மற்ற கட்சிகளோடு இணைந்து பாடுபட்டு     அந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்று     அந்தச் சாலைப் பணியாளர்களுக்கு அப்போது வேலை கிடைக்காமல்,  41 மாதங்கள் அவர்கள் வீட்டிலே இருந்து விட்டு, மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தபிறகு   அவர்களையெல்லாம் வேலையிலே அமர்த்தினால்    அவர்கள் சொல்கிறார்கள்     சரி, மகிழ்ச்சி, நன்றி    எங்களை வேலைக்கு அமர்த்தி விட்டாய், இடையிலே  41  மாத காலம் பழைய ஆட்சியில்  நாங்கள் வேலையில்லாமல் இருந்தோமே, அந்த மாதங்களுக்கு, அந்த இடைவெளிக்கு  இந்த ஆட்சியிலே  சம்பளம் கொடுக்க வேண்டும்,  அந்தக் காலத்தையும் கணக்கிலே எடுத்துச் கொள்ள வேண்டுமென்று போராடுகிறார்கள் என்றால்  இது படிப்பினால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாமா?   கூடாது.    படிப்பும் தேவை     நாம் என்ன காரியங்களை ஆற்றுகிறோம் என்று பக்குவமாக எண்ணிப் பார்க்கக் கூடிய பகுத்தறிவும் தேவை.   படித்தால் மாத்திரம் போதாது,  பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்.   அந்தப் பகுத்தறிவு போதனையைத் தான்  தந்தை பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள்,  இந்த இயக்கத்திலே உள்ள தலைவர்கள் எல்லாம்  மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.   அந்த மக்கள் சமுதாயத்தினுடைய  ஒரு பிரிவாக     எதிர்காலச் சமுதாயத்தை ஒளி மிக்க சமுதாயமாக ஆக்கக் கூடிய  கதிர்களாக    சுடர்களாக இருப்பவர்கள் தான் மாணவர்கள்.   அந்தச் சுடர்களை மீண்டும் ஒளிபொருந்திய விளக்குகளாக ஆக்கக் கூடிய   அதைத் துட்ண்டி விடக் கூடிய நிலையிலே உள்ளவர்கள் தான் ஆசிரியர்கள்.    அந்த ஆசிரியர்கள் தான் இன்றைக்கு 800 பேர்  பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

 
rgkumaran.blogspot.com
இந்தக் கருத்துகள்  மாணவர்கள் மத்தியிலே  பதிய வைக்கப்பட வேண்டும்.   அப்படி பதிய வைக்கப்படுகின்ற
காரணத்தால்  நாடு  அமைதி யான முறையிலே, அறிவார்ந்த வழியிலே  உரிமைப் போராட்டம் என்றாலும் கூட  அதற்காக வழி முறைகள் என்ன என்பதை யோசித்து அந்த வகையிலே போராடக்கூடிய    அந்த வகையிலே பாடுபடக் கூடிய  நிலைமையிலே மாணவ சமுதாயமும், அந்த மாணவ சமுதாயத்திற்குப் போதனை செய்யக் கூடிய    பாடம் கற்பிக்கக் கூடிய  ஆசிரிய சமுதாயமும்   இந்த இரண்டு சமுதாயங் களும்  இருக்கின்ற இந்தத் தமிழ்ச் சமுதாயமும்  என்றென்றும் தன்னுடைய கடமைகளை    தன்னுடைய  ஆர்வமான உழைப்பை    தன்னுடைய  பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.   அப்படி அமைத்துக் கொண்டால் தான்  இது போன்ற  பல்கலைக் கழகங்கள், கல்விக் கூடங்கள்  இன்னும் சொல்லப் போனால்  ஒரு காலத்திலே மரத்தடியிலே, ஆசிரமங்களிலே  படித்து அங்கிருந்து கல்வி கற்று    அங்கிருந்து பெற்ற அறிவை வலுப்படுத்தி   அதைப் பயன்படுத்தி  எத்தனையோ அற்புதங்களை  நாட்டிலே  மனிதர்கள் விளைவித்திருக்கிறார்கள்.
 நம்முடைய  பொன்முடி அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல்  பல வகையான  விளைவுகள்    பல
வகையான  உதவிகள்     விஞ்ஞான ரீதியான  ஆக்கப் பூர்வமான வசதிகள்     வாய்ப்புகள்    இவைகளோடு கூடிய படிப்பு  இன்றைய படிப்பு.   இதையெல்லாம் பயன்படுத்தி நாம் பெற வேண்டிய  பயன்கள் பெரும் பயன்கள், அந்தப் பயன்களைப் பெறுவதற்கு  இன்றைக்கு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் உழைக்க வேண்டும்.   அந்த ஆசிரியர்களுக்கு   அன்போடு நடந்து அவர்களுக்கு உற்சாகம் தரக் கூடிய  வகையிலே மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.   இந்த இருவருடைய ஒத்துழைப்பு தான் எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கக்கூடியது, நல்ல நிலையிலே வாழ வைக்கக் கூடியது, வளப்படுத்தக்கூடியது என்பதை இந்த இனிய விழாவிலே  நான் எடுத்துரைத்து,  இந்த விழா நடத்துவதற்கு பல முறை  என்னைச் சந்தித்து    நான் வந்தே தீரவேண்டுமென்று  வற்புறுத்தி    என்னை அழைத்து வந்து உங்கள் முன்னால்  நான் அமர்ந்து பேசுகின்ற இந்த வாய்ப்பை வழங்கிய  கல்யாணி அன்புச் செல்வனுக்கு (கைதட்டல்) என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 இங்கே அவர் உரையாற்றும்போது, கல்யாணி சொன்னார்     இந்தக் கல்யாணி,  பராசக்தி கல்யாணி அல்ல,  இந்தக்
கல்யாணி  தென் பாண்டிச் சிங்கத்திலே வருகின்ற கல்யாணி என்றெல்லாம் சொன்னார்கள்.    எந்தக் கல்யாணியாக இருந்தாலும்,  இவர்  எங்கள் வீட்டுக் கல்யாணி என்ற முறையிலே  (கைதட்டல்)  கல்யாணியின் உற்சாகத்தை, ஆர்வத்தை அவருடைய உழைப்பின் மேன்மையை வாழ்த்தி, கல்யாணி  என்றைக்குமே வெற்றி பெறக் கூடிய கதா பாத்திரம் தான் (கைதட்டல்)  இப்படிப்பட்ட கதா பாத்திரங்களைத் தான் நான் உருவாக்குவேன் எனவே அந்த வகையில்  இந்தக் கல்யாணி பெற்றிருக்கின்ற வெற்றிக்கு என்னுடைய பாராட்டுகளை, புகழுரைகளைக் கூறி  மாணவச்செல்வங்கள், ஆசிரியப் பெருமக்கள்  நீங்கள் இருவரும் இணைந்து  பு
தியதோர் சமுதாயத்தை உரு வாக்கவும், இருக்கின்ற  சமுதாயத்திற்கு இழிவு நேராமல் பார்த்துக் கொள்ளவும் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சமுதாய ரீதியில், இன ரீதியில்  நாமெல்லாம் ஓரினம்     எந்த இனம் என்பதை இங்கே எடுத்துச் சொல்லி     அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை    இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு  நாம் ஒரு இனம், அந்த இனத்தைத் தான் இங்கே பாடிய  “நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்” என்ற இந்தப் பாடலில்  திராவிடம் என்ற சொல் வந்ததே,  அந்தத் திராவிடத்திற்கு உரியவர்கள் நாம்.  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய  பாட்டில் வருகின்ற சொல் தான் திராவிடம்.   அந்தத் “திராவிடத்தின்  செல்வங்களாக     திராவிடச் சமுதாயத்தினுடைய தீரர்களாக     திராவிடச் சமுதாயத்தினுடைய திரு விளக்குகளாக  நீங்கள் எல்லாம் வாழ வேண்டும், வாழ வேண்டுமென்று வாழ்த்தி    என்னுடைய மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் தெரிவித்து   இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment