Wednesday, June 9, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு : நிகழ்ச்சி நிரல் முழு விவரம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 23-ந்தேதி பிரமாண்ட பேரணி நிகழ்ச்சி நிரல் முழு விவரம்
சென்னை, ஜூன். 9-
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற 23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 
மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார் கள்.
 
தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக கவர்னர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.
 
23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
 
“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய மந்திரி மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு மந்திரி அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.
 
பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
 
25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள். 11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
 
மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார் கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
26-ந்தேதி “தமிழுக்கும் ஆமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
 
மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன்கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.
 
27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்கு கிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய மந்திரி ராசா வெளியிடுகிறார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

2 comments:

  1. everybody see and wishes to here

    thanks

    ReplyDelete
  2. இந்த தகவல் பயனுள்ளதாக உள்ளது.


    நமது எதிர் காலம் பற்றி முழுமையாக நன்கு தெரிந்து கொள்ள இன்றே இந்த இணையதளத்தை பாருங்கள். www.yourastrology.co.in

    ReplyDelete